சொத்து தகராறில் காலால் மிதித்து அண்ணனை கொன்ற தம்பி - புதுக்கோட்டையில் பயங்கரம்

pudhukottai oldpersonmurder
By Petchi Avudaiappan Apr 09, 2022 07:58 PM GMT
Report

புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் அண்ணனை காலால் மிதித்து தம்பி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு 4 தம்பிகள், 2 தங்கைகள் உள்ளனர். இவர்களுக்குரிய சொத்துக்கள் அனைத்தும் பாகப்பிரிவினை செய்யாமல் இருந்து வந்துள்ளது.

இதனிடையே சொத்தை பிரித்து தரச்சொல்லி பழனிச்சாமியின் நான்காவது தம்பி சிவசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள பிடாரியம்மன் கோவில் அருகில் வயல்வெளியில் பழனிச்சாமிக்கும், சிவசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  

இதில் தகராறு முற்றவே கடுப்பான சிவசாமி அண்ணன் பழனிச்சாமியை கீழே தள்ளி தலையை தரையில் மோதியும், காலால் மிதித்தும் உள்ளார். இதனால் படுகாயமடைந்த பழனிச்சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் அண்ணனை தம்பி காலால் மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.