தங்கையுடன் சேர்ந்து வாழ மறுப்பு : மைத்துனனை காரை ஏற்றி கொல்ல முயன்ற அண்ணனால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கணபதி நகரை சேர்ந்த புஷ்பநாதன் பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
ஆனால் திருமணமாகி மூன்றே மாதத்தில் இருவருக்குமிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்ய புஷ்பநாதன் முடிவு செய்துள்ளார்.
மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு புஷ்பநாதன் தொடர்ந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்திலும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வினோதினி தொடர்ந்த வழக்கு பல்லடம் நீதிமன்றத்திலும் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை புஷ்பநாதன் வீட்டில் இல்லாதபோது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரி போல் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பநாதனின் வீட்டிற்கு சென்று அவரது அடையாள அட்டை விவரங்கள் மற்றும்
வீட்டில் அவருடன் யார் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் குறித்தும் கேட்டுவிட்டு சென்றுள்ளார்.
மேலும் தன் மீது சந்தேகம் எழாமல் இருக்க அக்கம் பக்கத்தில் இருந்த இரண்டு மூன்று வீடுகளுக்கும் சென்று இதே போல் விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளார் அவர்.
பின்னர் அங்கு வந்த மைத்துனர் குருவின் சொகுசு காரில் ஏறிச் சென்ற இந்த மர்ம நபரை எதிர்பாராதவிதமாக புஷ்பநாதன் பார்த்துள்ளார். சந்தேகமடைந்து காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அவர் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்ட குரு காரை புஷ்பநாதனை நோக்கி அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்த முயன்றுள்ளார். சுதாரித்துகொண்ட புஷ்பநாதன் இருச்சக்கர வாகனத்தை காட்டுப்ப்குதியில் ஓட்டிச்சென்று தப்பித்துள்ளார்.
இந்நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நேரத்தில் வேடம் அணிந்து வந்து தன்னை நோட்டமிட்டது குறித்தும் தன்மீது காரை ஏற்றி மைத்துனர் குரு கொல்ல முயற்சித்தது குறித்தும் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புஷ்பநாதன்.
ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட பல்லடம் போலீசார் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 4 நாட்களாக அலைக்கழித்து வருவதால் இந்த விவகாரம் குறித்து தனக்கு நியாயம் வழங்க வேண்டுமென அவர் மீண்டும் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில் மனைவியின் சகோதரர் காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.