பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுவலி - 145 பேர் மருத்துவமனையில் அனுமதி
அசாம் அரசு விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் திபு என்ற மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் செவ்வாய்க்கிழமை அன்று விழா நடைபெற்றது. இந்த அரசு விழாவில் முதல்வர் சர்வானந்த சோனோவால், சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி கொடுக்கப்பட்டது. இந்த பிரியாணியை சாப்பிட்ட பலருக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் 145 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 117 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்திருக்கிறார்.

விழாவில் பிரியாணி சாப்பிட்ட தனக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. இப்போது அது சரியாகிவிட்டதாக சர்மா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என கர்பி ஆங்லாங் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் சந்திர த்வஜா சின்கா ஆகியோர் தெரிவித்தார்.