நடுவானில் திடீர் சம்பவம்; அவசரமாக தரையிறங்கிய விமானம் - 700 பயணிகள் அவதி
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ்
சென்னை- லண்டன்- சென்னை இடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது.
இந்த விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும், பயணிப்பார்கள். இந்நிலையில், லண்டனில் 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்,
நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டு, வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்தது. பின் விமானம் உடனடியாக திரும்பிச் சென்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், அவசரமாக தரை இறங்கியது.
விமானங்கள் ரத்து
தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு, சென்னைக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், சென்னையில் இருந்து லண்டனுக்கு இன்று அதிகாலை 5.35 மணிக்கு, புறப்பட்டு செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட பயணிகள் லண்டன் மற்றும் சென்னையில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பயணிகள் தங்களுக்கு ஏற்படும், இதைப் போன்ற பிரச்சனைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
விமான நிறுவனங்களுக்கு பயணிகளின் உயிர் முக்கியம். இதை அடுத்துதான் இதை போல் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.