இந்தியா- பிரிட்டன் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தக முதலீடு
இந்தியா-பிரிட்டன் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டன், இந்தியா உடனான வர்த்தக கூட்டுறவை மேலும் வலுப்படுத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, இந்தியா - பிரிட்டன் இடையே, புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் அமலுக்கு வர உள்ளன.
10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை, இந்திய நிறுவனங்கள், பிரிட்டனில் மேற்கொள்ள உள்ளன. அவற்றில் ஒன்றாக, 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனத்தின், 2,400 கோடி ரூபாய் முதலீடும் அடங்கும்.
இந்நிறுவனம், தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை, பிரிட்டனில் அமைக்க உள்ளது. இதன் மூலம், 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இந்தியா - பிரிட்டன் வர்த்தக முதலீடு தொடர்பாக, பிரதமர் மோடியுடன், பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.