திருமணம் முடிந்த கையோடு புது மனைவியுடன் மாட்டு வண்டியில் பறந்த மணமகன்..!
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி மாட்டு வண்டியில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்ற காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ் முறைப்படி திருமணம்
ஈரோடு திண்டல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி. இவர் தற்போது தோல் மருத்துவத்துக்கான உயர்கல்வி படித்து வருகிறார்.
இவருக்கும் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.ரித்துவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த 27 ஆம் தேதி வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது.
மாட்டு வண்டியில் பயணம்
பின்னர் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், நிசாந்த் பாலாஜி மற்றும் அவரது மனைவி ரித்து ஆகிய இருவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்த புதுமண தம்பதிகளான நிசாந்த் பாலாஜி மற்றும் ரித்து மாட்டு வண்டியின் தாம்பு கயிற்றை பிடித்து கொண்டனர். மாப்பிள்ளை சாட்டையுடன் மாடுகளை தட்டி ஓட்டினார்.மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு சுமார் 4 கிலோ மீட்டர் துாரம் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
புதுமண தம்பதி மகிழ்ச்சி
இது குறித்து மணமகன் பேசுகையில், திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கு நானே வீட்டில் இருந்து மாட்டு வண்டியை ஓட்டி வந்தேன்.
பின்னர் எனது மனைவியை தாலி கட்டிய கையோடு மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன். பாரம்பரிய முறையில் நமது முன்னோர்கள் வழியில் எனது வாழ்க்கை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இதை தொடர்ந்து பேசிய மணமகள் ரித்து, மாட்டு வண்டியில் பயணம் செய்தது மறக்க முடியாத மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.