விருப்பமில்லாத திருமணம் - காவல் நிலையம் சென்ற மணமகளால் பரபரப்பு
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மவரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும் அனந்தபுரம் முதுகுப்பா பகுதியைச் சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் கதிரியில் உள்ள கோவிலில் நடை பெற இருந்தது.
திருமணத்திற்காக ஹரிபிரசாத் குடும்பத்தினர் குஷ்மாவின் தாயாரிடம் பல கட்டங்களாக 1 லட்சத்து 50 ரூபாய் பணத்தையும் 13 சவரன் நகைகளையும் கொடுத்துள்ளனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட குஷ்மாவின் தாயார் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கதிரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருதரப்பினரும் வந்தனர்.
நேற்று இரவு நலங்கு சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில் திடீரென குஷ்மா தனக்கு கொரோனா தொற்று உள்ளது. எனவே திருமணம் வேண்டாம் எனக் கூறியுள்ளார்.பின்னர் திடீர் என்று அங்கிருந்து கதிரி காவல் நிலையத்திற்கு சென்ற குஷ்மா தனக்கு விருப்பமே இல்லாமல் திருமணம் நடத்துகின்றனர் என்று புகார் அளித்தார்.
திருமணத்திற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில் மணப்பெண் இவ்வாறு நடந்து கொண்டதைப் பார்த்த உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
குஷ்மா அவரது தாயார் ஆகியோர் வேறு ஆதரவு இல்லாமல் வறுமையில் இருப்பதை பார்த்து அவர்களுக்கு மேலும் சிரமம் ஏற்படுத்தக்கூடாது எனக் கருதி குஷ்மாவின் திருமண செலவிற்காக தாங்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 15 சவரன் நகைகள் ஆகியவற்றை கொடுத்தோம் என ஹரிபிரசாத் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.
ஆனால் தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை நடத்த முயற்சிக்கும் அவர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணம் மட்டுமே வழங்கினார்கள். மேலுக் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆனால் கட்டாயமாக திருமணம் செய்வோம் என அவர்கள் கூறி வருகின்றனர் என குஷ்மா தெரிவித்தார். ஆனால் ஹரிபிரசாத் குடும்பத்தினர் திருமணத்திற்காக வழங்கிய பணம் நகைகளை தங்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் இல்லையென்றால் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
தங்களை விட வேறு யாராவது அதிக பணம் நகை தருவதாக கூறியதால் திடீரென குஷ்மா மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் இவை அனைத்தும் அவரது தாயார் சொல்வதைக் கேட்டு குஷ்மாவும் நாடகம் ஆடுவதாக ஹரி பிரசாத் தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சை கேட்ட போலீசார் விருப்பமில்லாத திருமணத்தை செய்ய முடியாது எனக் கூறி பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து தர்மவரம் காவல் நிலையத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் இருக்கக்கூடாது முதலில் இங்கிருந்து புறப்படுங்கள் இல்லை என்றால் நோய்த்தொற்று பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறி அங்கிருந்த அனைவரையும் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.