ஷாக் ரிப்போர்ட்- சென்னை பெருநகர பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய்: கண்டறியும் முறைகள் மற்றும் காரணங்கள்

Swetha Subash
in மருத்துவம்Report this article
இந்தியாவில் புற்றுநோயால் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் அதகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் பெண்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்த மார்பக புற்றுநோய், தற்போது 30 வயதிலேயே வருகிறது.
அதிலும் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற பெரு நகரங்களை சேர்ந்த பெண்கள் தான் இந்த வகை புற்று நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன, புற்று நோயில் இருந்து நம்மை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன, இதற்கான பிரத்தியேகமான பரிசோதனைகள் ஏதேனும் இருக்கிறதா போன்ற தகவல்களை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
பெண்களை புற்றுநோய் தாக்குவதற்கான காரணங்கள்:
உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிகளுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தால் அந்த குடும்பத்து பெண்ணுக்கு இந்தப் புற்று நோய் தாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் மிகச் சிறு வயதிலேயே வயதுக்கு வருவது, உடல் நலக் கோளாறு காரணமாக அதிக அளவில் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, உடல் பருமன்,
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகை மற்றும் மதுப் பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஒவ்வாத மேற்கத்திய உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மார்பக புற்றுநோய் வருவதற்கு வழிவகுப்பதாக கூறப்படுகின்றது.
தடுக்கும் வழிமுறைகள்:
பெண்கள், மாதம் ஒருமுறையாவது தங்களது மார்புகளை தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும் ‘ சுய மார்பக பரிசோதனை’ மேற்கொள்வது அவசியமாகும்.
பரிசோதனையின்போது, மார்பில் ஏதேனும் வீக்கம் தெரிகிறதா, மார்பக தோலில் அதீத சுருக்கம் இருக்கிறதா, மார்பகத்தில் ரத்தக் கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவணிக்க வேண்டும்.
அப்படி ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும்.
‘மேமோகிராம்’ என்ற எக்ஸ்ரே டெஸ்ட் குறைந்த அளவிலான கதிர் வீச்சின் மூலம் மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்து விடும்.
மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும் கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த பரிசோதனை வெளிப்படுத்திவிடும்.
இதன் மூலம் நோய் வருவதற்கு முன்பே கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை ‘ மேமோகிராம்’ பரிசோதனையை செய்து கொள்வது மிக முக்கியம்.