என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே.. தங்கையின் மருத்துவ செலவிற்காக பாடுபடும் சிறுவன்!
படிக்கும் வயதில் பல குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் சூழல் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் 10 வயது சிறுவன் ஒருவன்தனது 12 வயது சகோதரியின் உயிரை காக்கவும் அந்த சிறுவன் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காண்போர் பலரையும் நெகிழ செய்துள்ளது.
பாசமலர் முதல் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை இன்றும் அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டு கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் பாசம் என்றும் மங்காத ஒன்றாக இருக்கும்.
இந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் அஜீஸ் என்கிற 10 வயது சிறுவனின் சகோதரி 12 வயதான சகீனா பேகம் இந்த சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மூளை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கேன்சரை குணப்படுத்த சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து சிகிச்சைக்காக பணம் செலவிட்டு வருகின்றனர். அவர்களால் முடிந்த வரை சகீனா பேகமின் சிகிச்சைக்காக பணம் செலவழித்து வந்த போதிலும், மருத்து செலவுகளை சமாளிக்க சிறுமியின் குடும்பம் தொடர்ந்து திண்டாடி வந்துள்ளது.
சகோதரியின் மருத்துவ சிகிச்சையை சமாளிக்க முடியாமல் தனது குடும்பம் கஷ்டப்படுவதை கண்ட சிறுவன் சையத் அஜீஸ், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவெடுத்தான். இதனை அடுத்து தனது தாயுடன் இணைந்து பறவைகளுக்கான உணவை விற்க முடிவு செய்துள்ளான்.
தனது குடும்பம் மற்றும் தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக 10 வயது மகன் நிதி திரட்ட உதவுவது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள அஜீஸின் தாய் பில்கேஸ் பேகம், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகள் சகீனா பேகமின் உயிரை காப்பாற்ற ரேடியோ தெரபி சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் எங்களுக்கு பரிந்துரைத்தனர்.
பின்னர் தெலுங்கானா அரசிடமிருந்து நாங்கள் நிதியை பெற்றோம். அரசு கொடுத்த முழுத் தொகையும் சகீனாவின் ரேடியோ தெரபி சிகிச்சைக்காக செலவழித்ததில் தீர்ந்துவிட்டது.
Telangana | A 10-yr-old boy sells bird food in Hyderabad to pay for his sister Sakeena Begum's brain cancer treatment.
— ANI (@ANI) August 6, 2021
"We haven't received any help. We received govt funds only till radiation therapy. The medication is too expensive," says Bilkes Begum, Sakeena's mother pic.twitter.com/S5G5l9cKWq
மருத்துவத் தேவைகளுக்கும் பணம் செலவழித்த பின், இப்போது மீண்டும் மகளுடைய சிகிச்சைக்கான நிதி நிலையில் பழைய நிலைக்கே வந்து விட்டோம். எங்களின் கஷ்டத்தை பார்த்த அஜீஸ் அவனால் முடிந்த உதவிகளை செய்வதாக கேட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்ஆர்ஐ, எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பிற மருத்துவ செலவுகளும் வரிசையாக தொடர்வதால், பறவை உணவை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மருந்து செலவுகளை சமாளித்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இதன மூலம் கிடைக்கும் பணம் போதுமானதாக இருப்பதாகவும் அஜீஸின் தாயார் கூறி இருக்கிறார்.
அனைவரும் முன் வந்து தனது மகளைக் காப்பாற்ற உதவுமாறு இரண்டு குழந்தைகளின் தாயான பில்கேஸ் பேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது சகோதரியின் சிகிச்சைக்கு உதவி செய்ய பறவைகள் உணவை விற்கும் வேலையில் ஈடுபட்டாலும், சிறுவன் அஜீஸ் கல்வி கற்பதையும் விடவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள உள்ளூர் மதராசாவில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தனது கல்வியைத் தொடரும் சிறுவன் அஜீஸ், காலை சீக்கிரமே எழுந்து பள்ளிக்கு போவதற்கு முன் வரை தாயுடன் சேர்ந்து பறவை உணவை விற்று வருகிறான். தனி பெஞ்சை செட் செய்து சாலைகளில் அமர்ந்து கொண்டு பறவை உணவை விற்று வருகிறான் சிறுவன் அஜீஸ்.
இந்த நிலையில் தனது 12 வயது சகோதரியின் உயிரை காக்கவும் அந்த சிறுவன் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காண்போர் பலரையும் நெகிழ செய்துள்ளது.