மழைநீரை மட்டுமே குடித்து அமேசான் காடுகளில் உயிர் வாழ்ந்த சிறுவர்கள்
அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போன 2 சிறுவர்கள் 25 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலை சேர்ந்த முரா பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களான கிளைசன் (9வயது) மற்றும் கிளைகோ (7 வயது) இருவரும் குடும்பத்துடன் அமேசான் நதிக்கருக்கே உள்ள மனிகோர் பகுதியில் வசித்து வந்தனர். `கடந்த மாதம் இருவரும் பறவைகளை வேட்டையாட தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அடர்ந்த மழைக்காடுகளுக்குள் சென்ற நிலையில் இருவரும் தங்கள் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனையடுத்து தங்கள் மகன்களை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீட்புப் படையினர், உள்ளூர் மக்களை வரவழைத்து அவர்களின் உதவியுடன் பிரமாண்ட தேடுதல் வேட்டையை தொடங்கினர். 2 வாரங்களுக்கு மேல் தேடியும் இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அந்த காட்டுப் பகுதிகளுக்குள் வந்து சென்றதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையை கைவிட்டனர். ஆனால் உள்ளூர் பழங்குடியினர் இரு சிறுவர்களையும் தேடி வந்தனர். இதன்பின் ஒருநாள் விறகு சேகரிக்கும் குடும்ப நண்பர் தற்செயலாக அடர்ந்த காட்டில் சிறுவர்களை கண்டுபிடித்தார். காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சுற்றி பிரமாண்ட அமேசான் ஆறு ஓடிக் கொண்டிருந்தாலும் இருவரும் குடிப்பதற்கு ஏற்ற நீர் இல்லாமல் அவ்வப்போது பெய்த மழைநீரை பருகி வந்துள்ளனர். மேலும் காட்டில் கிடைத்த சிறு பழங்களை விஷமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் உடல் மெலிந்த கிளைகோவை கிளைசன் தோளில் தூக்கிக் கொண்டு வந்துள்ளான்.
சரியான தண்ணீர் மற்றும் உணவு எடுத்துக் கொள்ளாததால் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான நீரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.