நிலச்சரிவால் பிரிட்ஜ்க்குள் தஞ்சமடைந்த சிறுவன் - கடைசியில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவால் பிரிட்ஜ்க்குள் தஞ்சமடைந்த சிறுவன் கடும் போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் உள்ள லெய்டு மாகாணத்தை தாக்கிய மெகி புயலால் அங்கு கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த வகையில் அங்குள்ள பேபே நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் வசித்து வந்த சி.ஜே. ஜாஸ்மி என்ற 11 வயது சிறுவன் குளிர்சாதன பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.
பின்னர் அங்கு நடைபெற்ற மீட்பு பணியின் போது நதிக்கரை அருகே குளிர்சாதன பெட்டியில் சிறுவன் இருப்பதை வீரர்கள் கண்டுபிடித்தனர்.சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக குளிர்சாதன பெட்டிக்குள் இருந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவனின் காலில் அடிபட்டிருந்ததால் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிறுவனின் தந்தை, தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேசமயம் நிலச்சரிவு காரணமாக இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெகி புயல் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாகாணத்தைவிட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.