ஐஸ்கிரீம் பந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு - எடுத்து விளையாடிய சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீத முடிவு

icecreamballexplode bombblasted
By Petchi Avudaiappan Nov 23, 2021 06:22 PM GMT
Report

கேரளாவில் வெடிகுண்டு என தெரியாமல் ஐஸ்கிரீம் பந்தால் விளையாடிய போது குண்டு வெடித்துச் சிதறியதில் 12 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடத்தை அடுத்த நரிவயல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்த் பிரதீப் என்ற 12 வயது சிறுவன்  அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரதீப் இன்று தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது சிறுவர்களுள் ஒருவர் அடித்த பந்து அருகாமையில் உள்ள காம்பவுண்டில் சென்று விழுந்துள்ளது.  கிரிக்கெட் பந்தை தேடிச் சென்ற பிரதீப் அங்கு மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் இருப்பதை பார்த்து அதில் ஒன்றை கையில் எடுத்துள்ளான். பின்னர் அந்த பந்தின் மூடியை திறக்க முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக அந்த பந்து வெடித்துச் சிதறியது.

இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் காயத்தினால் துடிதுடித்த சிறுவனை மீட்டு தலசேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பிரதீப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதீப் எடுத்த ஐஸ்கிரீம் பந்து குரூட் குண்டு என சொல்லப்படுகிறது. அது குண்டு என தெரியாமல் எடுத்து திறந்தததால் அது வெடித்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீதம் இருந்த ஐஸ்கிரீம் குண்டுகளை கைப்பற்றினர், பின்னர் வெடித்துச் சிதறிய ஐஸ்கிரீம் குண்டுகளின் மிச்சங்களையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேசமயம் கண்ணூர் பகுதியில் ஏற்கனவே இதுபோல ஐஸ்கிரீம் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.