குத்துச்சண்டையில் அலற விட்ட பூஜா ராணி .. காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
கொரோனா காரணமாக ரசிகர்களின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், பதக்கம் வெல்ல ஒவ்வொரு வீரரும் வரிந்து கட்டி களம் காண்பதால் போட்டிகள் சுவாரஸ்யமாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் இன்று பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது.
இதில், 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியாவின் இச்ரக் சைப்பை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே இருவருமே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக பூஜா ராணியின் ஆட்டம் அனல் பறந்தது. இதனால் முதல் இரண்டு சுற்றுகளையும் 5-0 என்ற கணக்கில் அவர் வென்றார். இதனால் காலிறுதி சுற்றுக்கு பூஜா ராணி முன்னேறினார். இதில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.