மென்ட்டல் டார்ச்சர் கொடுக்குறாங்க..ஒலிம்பிக் வெண்கலம் வென்ற லவ்லினா வேதனை!
பயிற்சியாளர்களை நீக்கி, அனுமதி மறுத்து தனக்கு மன உளைச்சலைக் கொடுக்கின்றனர் என்று கடும் வேதனையுடன் லவ்லினா புகார் எழுப்பியுள்ளார்.
லவ்லினா
லவ்லினா ஏற்கெனவே பல தடைகளைக் கடந்து குத்துச்சண்டையைத் தேர்வு செய்து அதிலும் பல சோதனைகளைக் கடந்து டோக்கியோவில் வெண்கலம் வென்று சாதனை புரிந்தவர்.
காமன்வெல்த் கிராமத்தில் இவரது பயிற்சியாளர் சந்தியா குருங்கை அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். இதனால் காமன்வெல்த் தொடங்க இன்னும் 8 நாட்கள் இருக்கையில் தன் பயிற்சி தடைபட்டுப் போயுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மன உளைச்சல்
இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “மிகுந்த வருத்தத்துடன் இதை தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு கடும் மன உளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். டோக்கியோவில் நான் பதக்கம் வெல்ல காரணமான என் பயிற்சியாளர்களைத் தொடர்ந்து எனக்குத் தெரிவிக்காமல் நீக்கியும்
என் பயிற்சிகளை தொடர்ந்து இடையூறு செய்தும் எனக்கு மன உளைச்சலை கொடுத்து வருகின்றனர். துரோணாச்சாரியா விருது பெற்ற என் பயிற்சியாளர் சந்தியா குருங் காமன்வெல்த் கிராமத்துக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார், அவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசியல்
எனது இன்னொரு பயிற்சியாளரை இந்தியாவுக்கே அனுப்பி விட்டனர். நான் திரும்பத் திரும்ப கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் இது நடந்துள்ளது, இதனால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிக்கல்களில் நான் எப்படி என் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும்? உலக சாம்பியன்ஷிப் போட்டிகளும் இப்படித்தான் பிரச்சனையானது. அரசியலினால் என் காமன்வெல்த் போட்டிகள் பாதிக்கப்பட கூடாது.
இந்த அரசியலை மீறி நாட்டுக்காக பதக்கம் வெல்வேன், ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டு தன் வேதனையை தெரிவித்துள்ளார்.