அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு , கவிழ்ந்த போரிஸ் ஜான்சன் அரசு : ஆட்சி கவிழ காரணம் என்ன?
பிரிட்டனில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதை கவனிக்காமல் பதவி கொடுத்ததற்காக தற்போது ஒட்டுமொத்த பிரிட்டன் அரசிலும் புயல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு
கிறிஸ்டோஃபர் ஜான் பின்சர் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2020 முதல் 2022ஆம் ஆண்டு தொடக்கம் வரை வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 2022 பிப்ரவரியில், கிறிஸ்டோஃபர் ஜான் பின்சர் அரசின் முக்கியப் (Deputy Chief Whip) பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
கலைந்த அமைச்சர்கள்
கடந்த ஜூன் மாத இறுதியில் (29ஆம் தேதி புதன்கிழமை) லண்டன் நகரத்தில் உள்ள கார்ல்டன் கிளப்பில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

பிரிட்டன் நாட்டை ஆளும் கட்சியின் துணை முதன்மைக் கொறடா பதவியில் இருக்கும் ஒருவர், பொதுவெளியில் இப்படி தவறாக நடந்து கொள்ளலாமா? என ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டு செய்தி வெளியாகத் தொடங்கியது.
நேற்று இரவு நான் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டேன். நான் என்னையும் மற்றவர்களையும் அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு சூழலில் நான் துணை முதன்மை கொறடா பதவியில் இருந்து விலகுவது தான் சரியாக இருக்கும் என கிறிஸ் பின்சர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வியாழக்கிழமை ராஜினாமா செய்துவிட்டார். இதை 'சன்' என்கிற பத்திரிகைதான் முதலில் பிரசுரித்தது.
பறிபோன பிரதமர் பதவி
இந்த நிலையில் இதற்கிடையே, இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், அரசு மீதான நம்பிக்கையை இழந்ததால் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் வில் குயின்ஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் லாரா டிராட் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பு, ஒரே நாளில் இங்கிலாந்தின் 4 முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா என தொடர் பிரச்சினைகளால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர்.
இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.