57வது வயதில் 6வது குழந்தைக்கு தந்தையான பிரதமர் - குவியும் வாழ்த்து
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி தம்பதிக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர், லண்டன் மேயர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றார்.
போரிஸ் ஜான்சனின் குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் 1993 ஆம் ஆண்டு காலமானார் .பின்னர் பிரபல வழக்கறிஞர் மரினா வீலரை 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் 2020 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இறுதியில் தனக்கும் அரசியல் செயற்பாட்டாளர் கேரிக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திருமணத்திற்கு முன்பாகவே இந்த ஜோடிக்கு 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி எளிமையாக திருமணம் முடித்துக் கொண்டனர். இந்நிலையில் போரிஸ் - கேரி தம்பதிக்கு லண்டன் தேசிய அரசு மருத்துவமனையில் 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டனில் பரவி வருவதால், ஜான்சன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் பரவலையும் சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் இந்த மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரிட்டன் பிரதமருக்கு எத்தனை குழந்தைகள் என்ற கேள்வி பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பரில் நடந்த நேர்காணலின்போது பதில் அளித்த போரிஸ் ஜான்சன், மொத்தம் தனக்கு 6 குழந்தைகள் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.