4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24-ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இந்த சூழலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான நல்லுறவு, தடையற்ற வர்த்தகம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்திய தொழில்துறை தலைவர்களையும் போரிஸ் ஜான்சன் சந்திக்கக்கூடும். மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வருகிற 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.