பூஸ்டர் தடுப்பூசி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2,071 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 87.35 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகும்.
இதற்கிடையே, கொரோனா உருமாறி ஒமைக்ரான் வைரசாக வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முன்களப் பணியாளர்கள், 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.
முதல் தவணை மற்றும் 2-ம் தவணை எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும்.
தமிழகத்தில் 35.46 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 9.78 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள். 5.65 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள்.
20.03 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அந்த வகையில் 4 லட்சம் பேர் இன்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.