நாடு முழுவதும் ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ள நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக பேராயுதமாக கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் எனத் தெரிகிறது.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தற்போது அரசு தடுப்பூசி மையங்களில் போடப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.