பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் மோதி விபத்து - பலரை காணாததால் பதற்றம்

brahmaputrariver boataccident
By Petchi Avudaiappan Sep 08, 2021 09:39 PM GMT
Report

பிரம்மபுத்திரா நதியில், இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் மஜூலி என்ற இடத்தில் இருந்து பயணிகள் படகு ஒன்று நிமதி படித்துரை நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் மற்றொரு படகு சென்றது.

ஜோர்ஹாட் பகுதியில் இரண்டு படகுகளும் வந்த போது திடீரென்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில், படகுகளில் பயணித்த பலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படகில், 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.

தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 60க்கும் அதிகமானோர் காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படகு விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலத்தில் படகு விபத்து குறித்த செய்தி கவலை அளிக்கிறது. மாயமான பயணிகளை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.