டி20 உலகக் கோப்பை போட்டி : இந்திய வீரர்களுக்கு வழங்கும் உணவு சரியில்லை - பிசிசிஐ குற்றச்சாட்டு
நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய வீரர்களுக்கு வழங்கும் உணவு சரியில்லை என்று பிசிசிஐ குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ‘
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.
ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
உணவு சரியில்லை - பிசிசிஐ
இந்திய அணி, நாளை சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை நேருக்கு நேர் மோதுகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிட்னியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று பிசிசிஐ குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறது.
இது குறித்து பிசிசிஐ தெரிவிக்கையில், இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சாண்ட்விச் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. சிட்னியில் நடந்த பயிற்சிக்கு பிறகு வழங்கப்பட்ட உணவு ஆறிபோனதாகவும், நல்ல உணவாக இல்லை என்று உணவு குறித்து இந்திய அணி வீரர்கள் ஐசிசியிடம் தெரிவித்துள்ளனர்.
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்களுக்கு ஐசிசி உணவு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.