சர்வதேச ரத்த தான தினம் - ரத்த தானம் செய்தால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மையா?
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் 14-ஆம் தேதி சர்வதேச ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒரு உயிரைக் காக்க ரத்தம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் 6 லிட்டர் ரத்தம் இருப்பதாக மருத்துவ துறையில் கருதப்படுகிறது. இந்த ரத்தத்தின் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் என இரண்டு அணுக்கள் தனி தனி வேலைகளை செய்து வருகின்றன.
ரத்தம் ஓடாமல் நம்மால் இயங்க இயலாது. ஹீமோகுளோபின் அளவை பொறுத்தே நாம் எவ்வாறு ஆரோக்கியமாக உள்ளோம் என தெரிகிறது. ரத்தத்தின் அளவு பல்வேறு காரணங்களால் குறைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து குறைதல் அல்லது உடம்பில் ரத்தசோகை ஏற்படுதல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், போன்றவற்றால் ரத்தத்தின் அளவு குறைகிறது. விபத்துகளாலும் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதன் மூலம் ரத்த அளவு குறைகிறது.
இவ்வாறு பல்வேறு காரணங்களால் உடலில் ரத்தத்தின் அளவு குறையும் போது, பிறருடைய ரத்தத்தை எடுத்துக் கொடுப்பது மருத்துவ முறையாக உள்ளது. இதைத்தான் ரத்த தானம் என்கிறோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாம் ரத்த தானம் செய்யும்போது, நம் உடலுக்கும் அது நன்மையே செய்கிறது. பொதுவாக ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கும். அது நம் உடலில் கல்லீரல், இதயம் ஆகிய இடங்களில் படிந்து உடலுக்குச் சோர்வையும், துன்பத்தையும் தரும். ரத்த தானம் செய்யும்போது, இந்த அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன்செய்யப்படுகிறது.
மேலும் ரத்த தானமாக நாம் ஒரு யூனிட் கொடுத்தால் அதை 3 பேருக்குப் பயன்படுத்துவார்கள். சில சமயம் ஒருவருக்கேகூட பயன்படலாம். இதனால் யாரோ ஒருவருக்கு நாம் நன்மை செய்துள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது. ரத்தம் நமக்கும் தேவை பிறருக்கும் தேவை. அப்படி யாரோ ஒருவர் நாம் கொடுக்கும் ரத்தத்தால் உயிர் வாழ்ந்தால் அது நமக்கு மகிழ்ச்சியே.
ரத்த தானம் செய்வதற்கு நம் உடல் அளவு 50 கிலோவை கடந்து இருக்க வேண்டும். ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தால், நம் உடலில் உள்ள 650 அளவு கலோரியை எரித்துவிடுகிறதாம். இது நம் உடலுக்குக் கிடைக்கும் பயனாகும். இந்த கொரோனா காலத்தில் ஏராளமானோர் ரத்தமின்றி உயிரிழந்ததை காதாலும் கேட்டும், கண்ணாலும் பார்த்திருக்கிறோம்.
ஆகையால் அனைவரும் ரத்த தானம் செய்து பிறருக்கு வாழ வழி வகுத்து நாமும் நலமுற்று வாழ்வோம்! இன்று ரத்த தான தினத்தையொட்டி பல மருத்துவமனைகளில், ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது! இதுவே பெரிய சாதனை..
அதற்கு ஒரு தினம் வைத்ததால் எவ்வளவு ரத்தங்கள் சேகரிக்கப்படுகிறது என்பதை நாம் அறியவேண்டும்!