go back modi; பிரதமருக்கு ஏதிராக கறுப்பு கொடி போராட்டம் - 100க்கும் மேற்பட்டோர் கைது!
சேலம் வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டும் போராடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி
மக்களவை தேர்தளுக்காக தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதில், பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்களும் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அவர், வழக்கம் போல் திமுக- காங்கிரஸை மிக கடுமையாக விமர்சித்தார். ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றை குறிப்பிட்டு திமுக- காங்கிரஸை சாடினார்.
முன்னதாக, சேலம் வந்த பிரதமர் மோடியை திரும்பப் போக வலியுறுத்தி கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
கறுப்பு கொடி போராட்டம்
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் கறுப்புக் கொடிகளுடன் திரண்ட 100க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகள, திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மோடிக்கு கறுப்பு கொடி காட்டியதாக 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக திராவிடர் விடுதலை கழகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று 19.03.2024 சேலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் தோழர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் தோழர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தோழர் தங்கதுரை, சேலம் மாநகர செயலாளர் தோழர் ஆனந்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.