பாஜகவை வீழ்த்துவது நிச்சயம்...தொகுதி பங்கீடு சுமுகமாக நடைபெறும்...ராகுல் காந்தி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை இந்தியா கூட்டணி நிச்சயமாக தோற்கடிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி உரை
இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா அணி தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் என கூறி, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் என தெளிவுப்படுத்தினார். இந்தியா கூட்டணி நிச்சயம் பாஜகவை தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தொடர் ஆலோசனை நடைபெற்றதன் மூலம் கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்கு இடையேயான வேறுபாடுகள் பேசி களையப்பட்டுள்ளது என்று கூறிய ராகுல் காந்தி, ஊடகங்களும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மோடி பொய் சொல்கிறார்
தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது என கூறி, எல்லை விவகாரங்களில் பிரதமர் மோடி பச்சை பொய்களை பேசுகிறார் என கடுமையாக சாடினார்.
தான் லடாக் சென்று அங்குள்ள மக்களும் பேசியதாக குறிப்பிட்டு, அப்போது இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதை லடாக் மக்கள் தன்னிடம் கூறினர் என பேசினார். பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் பொய் பேசி வருகிறார் என்று குற்றம்சாட்டி, பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.