தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமை இல்லை, நானும் தண்ணீர் தரமாட்டேன் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சால் சர்ச்சை!
தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமை இல்லை என கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சராக பதவியேற்றதையடுத்து, ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற அவர், பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து, அண்ணாமலைக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட வாய்ப்பு வழங்கப்பட்டது.இருப்பினும் அவர், தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை, “தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமை இல்லை என்றும், நான் சுத்தமான கன்னடியன் என்பதால் நான் கன்னட மொழி பேசக் கூடியவன், கன்னட மண்ணுக்கு சொந்தக்காரன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை என கூறியுள்ளார்.
மேலும், மண்ணுலகில் வாழும் வரை கன்னட மண்ணுக்கு மட்டும் தான் நான் விசுவாசமாக இருப்பேன் என்றும் காவேரி தண்ணீர் பிரச்சனையில் கன்னட மக்களோடு நின்று நானும் தமிழகத்திற்கு தண்ணீர் விட அனுமதிக்கமாட்டேன், உங்களோடு நின்று காவிரி பிரச்சினைக்காக போராடுவேன்” என கூறியிருந்தார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்டு பொதுமக்கள் தங்கள் ஆத்திரங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.