தோல்வி பயம்...அதான் செல்போன் ஒட்டுக்கேட்பு!! எதற்கும் அஞ்சமாட்டோம்!! முதல்வர் முக ஸ்டாலின்
பூவிருந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பா.ஜ.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் உரை
சென்னையை அடுத்த பூவிருந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார். மணமக்களை வாழ்த்திய பிறகு விழா மேடையில் உரையாற்றி அவர், நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்கக் கூடாது என டெல்இருந்து தூது வந்த நிலையிலும், ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சியை எதிர்த்து, தி.மு.க. ஆட்சியை இழந்தது என்று சுட்டிக்காட்டினார்.
எமர்ஜென்சியின்போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர் கருணாநிதி என பெருமிதம் கூறிய முதல்வர் முக ஸ்டாலின், நாங்கள் ஆட்சியை நம்பி இல்லை, ஜனநாயகத்தை நம்பி இருக்கிறோம் என்றும் உயிரே போனாலும் எமர்ஜென்சியை எதிர்த்து நிற்போம் என்றும் கலைஞர் கூறினார் என்பதை நினைவுகூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கூறி பா.ஜ.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் தான் எதிர்க்கட்சிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என குற்றம்சாட்டினார்.
ஒருபோதும் அஞ்ச மாட்டோம்
தனக்கு எதிராக இதுவரை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பா.ஜ.க அரசு தற்போது, இந்த செயலை கையில் எடுத்துள்ளது என்று சாடிய ,முதல்வர் முக ஸ்டாலின், நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வியை தழுவும் என்ற செய்தியே வருகிறது என கூறி, இந்தியாவை காக்க "இந்தியா" கூட்டணிக்கு மக்கள் வெற்றியை தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், பாஜக அரசுக்கு எதிராக எந்த கருத்தை சொன்னாலும் மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் என்று கூறி, இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் தெரிவித்தார்.