ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? முதல்வர் ஸ்டாலின்
சகோதரர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பி இருக்கின்றார்.
மேலும் எட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து, கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேசிய பாதுகாப்பு தொடர்பாக எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன்போது, லோக்சபாவில் ராகுல் காந்தி பேசிய போது, சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து பேசிய போது, ராகுல் காந்தியின் பேச்சிற்கான ஆதாரமாக முன்னாள் ராணுவ தளபதி நரவானேவின் புத்தகத்தை மேற்கொள் காட்டினார்.

இதற்கு மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். அதன் போது, காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவர் ஓம் பிர்லா இருக்கையை நோக்கி வீசியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம். பி. சு.வெங்கடேசன் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?
அவையின் உறுப்பினர்களுக்குப் பதிலளிக்க மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான கேள்விகளை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.