4000 கோயில்களில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம் - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வரவேற்கிறோம் ஆனால் 4000 கோயில்களில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து திமுக வெற்றிபெற்றதும் இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 100 நாளுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். மேலும் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.
இந்த திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் திட்டதை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் "ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் உள்ள 4000 கோயில்களில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம். தமிழ்நாட்டில் 4000 கோயில்களில் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.