தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல - தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு
nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல
இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.
"ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும்.
இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் – தமிழக நலனுக்கு எதிரானது!
— Nainar Nagenthran (@NainarBJP) August 12, 2026
தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள @TVKPartyHQ அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். "ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு"…
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் திரு. விஜய் அவர்களின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.