‘’எனக்கு அந்த ஒரு வாக்கே பெருமைதான் ’’ : கோவை பாஜக நிர்வாகி விளக்கம்!
கோவையில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர் 1 ஓட்டு மட்டும் வாங்கியதால், அது சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆன நிலையில் தான் வாங்கிய ஒரு வாக்கே தனக்கு பெருமை என கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், சுயேட்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.
இந்நிலையில், பா.ஜ., இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக்கு, அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட ஓட்டுபோடவில்லை என சமூகவலைதளங்களில் டிரெண்டிங் செய்து விமர்சிக்கப்பட்டது.
இது குறித்து கார்த்திக் கூறியதாவது:,
9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.
நான் இருப்பது 4வது வார்டில் எனக்கும், எனது குடும்பத்திற்கும் அங்கு தான் ஓட்டு உள்ளது. இடைத்தேர்தல் வருவதையொட்டி, 9வது வார்டில் போட்டியிட்டு பார்ப்போம் என அங்கு போட்டியிட்டேன். எ
னது குடும்ப சூழ்நிலை காரணமாக சரிவர பிரச்சாரம் செல்ல முடியவில்லை. நான் அந்த வார்டில் நிற்கிறேன் என்பதை யாருக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

அதே சமயம் எனக்கு ஒரு ஓட்டு கிடைத்திருக்கிறது. அதையே நான் வெற்றியாக எடுத்துக்கொள்கிறேன்.
மீண்டும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடுவேன். 4வது வார்டில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை அடைவேன்.என கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு ஒரு வாக்குப்பெற்ற கோவை நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.