இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது உதவுவது போல் நடித்தார் ஸ்டாலின் - அண்ணாமலை ட்வீட்!
பாதயாத்திரை குறித்து விமர்சித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
விமர்சனம் செய்த முதலமைச்சர்
பாஜக சார்பில் ஊழலை எதிர்த்து "என் மண் என் மக்கள் " என்ற பாதயாத்திரையை தொடங்கினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த நடைப்பயணம் நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கியாது. இந்த பயணம் இறுதியாக சென்னையில் முடிவடைய உள்ளது. இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி மாவட்ட மாநில துணை அமைப்பாளர்களின் அறிமுகக் கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் என் மண், என் மக்கள் யாத்திரையை விமர்சித்து பேசினார். அப்போது அவர் “அமித்ஷா பாதயாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார்.
அது பாதயாத்திரை இல்லை, குஜராத்திலும், தற்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை” என பேசினார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக அண்ணாமலை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
அந்த பதிவில் "நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள், நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை, பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.
மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. 2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.
பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.