திமுக-வின் ’பி ’டீம் சீமான்; இப்படி பல்டி அடிப்பார் என கனவில்கூட நினைக்கவில்லை - அண்ணாமலை பேட்டி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பாதயாத்திரை
பாஜக சார்பில் ஊழலுக்கு எதிராக 'என் மண்,என் மக்கள்' என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தின் இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியிலிருந்து தொடங்குகிறார் அண்ணாமலை.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்த அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் 'நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்ணாமலை பேட்டி
அப்போது பேசிய அண்ணாமலை "சீமானிடம் எனக்குப் பிடித்ததே அவரது தைரியமும், துணிச்சலான பேச்சும்தான். ஆனால், ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டார் என்பதற்காக பயந்ததுடன், தி.மு.க-வை ஆதரிக்கிறேன் என்கிறார்.
போன வாரம் வரைக்கும் வேறு ஒரு சீமான், இப்போது 2.0 சீமான். பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், அந்த தொகுதியில் தி.மு.க போட்டியிடாவிட்டால் நான் போட்டியிடுவேன் என சீமான் கூறியிருக்கிறார். நாங்களும் திராவிடக் கட்சிகளும் பங்காளி என்கிறார். தி.மு.க-வை பங்காளி என்று கூறுவதால், தி.மு.க-வின் ’பி ’டீம் சீமான் என நிரூபணமாகிவிட்டது.
சீமான் பேச்சு, அவர் மீதுள்ள மரியாதையைக் குறைத்துவிட்டது. சீமான் இப்படி பல்டி அடிப்பார் என கனவில்கூட நான் நினைக்கவில்லை. ஒரு மனிதனை ஒரு புகார் எந்த அளவுக்கு மாற்றிருக்கிறது என்று பாருங்கள்” என்னு அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.