பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .அதன்படி, ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஜெய்ஹிந்த் எனும் வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருவதாகவும் , மோடி அரசின் மக்கள் நல திட்டம் , சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ' ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021 'க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் , நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் உடனடியாக திறக்கப்பட வேண்டும். இந்து அறநிலையத்துறை நிலங்கள்
உடனடியாக மீட்கப்பட்டு கோயில்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.நீட் தேர்வு வந்த பிறகு 400 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து சூர்யா பொய்களை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.