விடுவிக்க அதிகாரமே இல்லை - பில்கிஸ் பானு வழக்கு - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!!
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளனர் பில்கிஸ் பானு.
வழக்கு
நாடே அதிர்ந்து போன குஜராத்தின் மாநில கலவரத்தின் வடுக்கள் இன்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் வலியை கொடுத்து கொண்டே இருக்கின்றது. அதில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் பில்கிஸ் பானு தொடுத்த வழக்கு.
கலவரத்தின் போது தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மேலும் அவரின் மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அப்போது பில்கிஸ் பானுவுக்கு 20 சுமார் வயது. 2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த போது தான் வழக்கில் முதல் முதல் கைது நடைபெற்றது.
பில்கிஸ் பானு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியை நாட, வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. நீதிக்கான 17 ஆண்டுகால போராட்டத்தில், பில்கிஸ் பானு மற்றும் அவரது கணவர் யாகூப் ரசூல் அவர்களது ஐந்து குழந்தைகளுடன் பத்து வீடுகளை மாற்ற வேண்டியிருந்ததாகவும் பேட்டி ஒன்றில் மனவருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
விடுதலை
பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த குற்றத்தில் 11 பேரை குற்றவாளிகள் என்று மும்பை CBI நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அதனை உறுதி செய்தது மும்பை உயர் நீதிமன்றம்.
இதில், பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் அரசை கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதையடுத்து, அரசு ஒரு குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளான ஜஸ்வந்த்லால் பாய், கோவிந்த் பாய், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின்சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை நாடெங்கிலும் ஏற்படுத்தியது.
சரமாரி கேள்வி
இந்த தீர்ப்பை தொடர்ந்து தான், அதற்கு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.பில்கிஸ் பானுவுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுபாஷினி அலி,திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா போன்றோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்போது பில்கிஸ் பானுவின் மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதுடன், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரரவை ரத்து செய்துள்ளது.
மேலும், வழக்கில் குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, முன்கூட்டியே விடுதலை செய்யவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.