மெரினா சாலையில் பைக் சாகசம் : 8 பேர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் முக்கிய சாலைகளான சென்னை மெரினா காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இரவு நேரங்களில், பைக் சாகச பந்தயத்தில் இளைஞர்களை ஈடுபடுவது தெரிய வருகிறது.
இதன் காரணமாக வாகன தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அத்துடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணை உரசி சென்று அவர் கீழே தடுமாறி விழுந்தார்
. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.அத்துடன் சென்னை மெரினாவில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இன்னும் சிலரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து கொருக்குப்பேட்டை சேர்ந்த ரஹமத்துல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக் ,ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து பேரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவியாளர் ஜவஹர் பீட்டர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேருக்கும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறு பேர் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் , இரண்டு சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களின் பைக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாதிக், ஆசிப், ரஹ்மத்துல்லா, முகேஷ், ஹரிஹரன், ரோமன் ஆகிய 6 பேர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது