இனி பெண் போலீசார் லிப்ஸ்டிக், முகத்தில் பவுடர் போட தடை - காவல்துறை உத்தரவு
பெண் போலீசார் லிப்ஸ்டிக், முகத்தில் பவுடர் போட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேக்கப் போட தடை
பீகாரில் பெண் போலீசார் பணி நேரத்தின் போது சீருடையில் நகைகள் அணிந்து கொண்டும், முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் பூசிக்கொண்டும் ரீல்ஸ் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பீகார் மாநில காவல்துறை தலைமையகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பணியில் இருக்கும்போது பெண் போலீசார் மேக்கப், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதும், சீருடையை முறையற்ற வகையில் அணந்திருப்பதும் விதி மீறல்.
சமூக ஊடகங்களில் பதிவிட ரீல்ஸ் உருவாக்குதல், ஆயுதங்களை காட்சிப்படுத்துதல், பணியில் இருக்கும்போது இசை கேட்பதற்காகவோ அல்லது தனிப்பட்ட அழைப்புகளுக்காகவோ புளூடூத் சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவையும் விதி மீறல்கள்.
காவல்துறை எச்சரிக்கை
பணி நேரத்தில் நகைகள் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்களை அணிந்து ரீல்ஸ் தயாரித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட 10 பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு ஆண் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் பொருந்தும். அவர்கள் பணி நேரத்தில் சீருடைகளை முறையாக அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களை கடமைகளில் இருந்து திசைதிருப்பும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.