பீகாரில் ஆட்டம் காணும் பாஜக : முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் மோதல் உருவானது , இதையடுத்து, பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் ராஜினாமா
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவித்தார். இதனையடுத்து பாஜக- ஜேடியூ கூட்டணியின் 2 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகினால் ஆட்சி அமைக்க ஆதரவு தருவோம் என ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருந்தன.
பாட்னாவில் இன்று லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடிதத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார்.
மேலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆர்ஜேடி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். பீகாரில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 160 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இதனால் பீகாரில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் ஆட்சி அமைகிறது. பீகாரில் தற்போதைய நிலையில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய கட்சிகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.