எடப்பப்படியா? ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் மிகப்பெரிய தவறு
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய திரையுலகின் மிகப் பெரிய தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னில் இருந்த நடிப்பு திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும் வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக பல தியாகங்களை செய்த என் அண்ணன் திரு.சத்திய நாராயணராவ் அவர்களுக்கும் எனது திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு.பாலசந்தர் அவர்களுக்கும் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பப்படி பழனிசாமி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கும் மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும் நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும், என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதில், 'எடப்பாடி' என்பதற்கு பதிலாக, 'எடப்பப்படி'என்று அறிக்கையில் இருக்கிறது, இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
— Rajinikanth (@rajinikanth) April 1, 2021