பிக்பாஸ் ராஜூ அம்மாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் - என்ன காரணம்?
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ராஜூவின் அம்மா மற்றும் மனைவி தாரிகாவை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டுக்குள் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் இந்த டாஸ்கை ரசிகர்களும் சரி, போட்டியாளர்களும் சரி ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் வருவது தான் இந்த ஃபிரீஸ் டாஸ்கில் பலராலும் ரசிக்கப்படும் ஒன்று.
கிட்டத்தட்ட 80 நாட்களாக தங்களது குடும்பத்தை பார்க்காமல் இருக்கும் போட்டியாளர்கள் அவர்களின் அம்மா, அப்பா, மனைவி, நண்பர்கள் என உறவுகளை பார்த்து பாசத்தில் அழுது தீர்ப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் அழுவதை பார்த்து ரசிகர்கள் கண்ணிலும் கண்ணீரை பார்க்கலாம்.
முதல்நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் வந்தார்கள். நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூவின் மனைவி தாரிகா, அம்மா சந்திரிக்கா ஆகியோர் உள்ளே வந்தனர்.
தனது மகன் இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து இருப்பதை பார்த்து தாயாக அவர் பெருமைப்பட்டார். எல்லா தாய்க்கும் இருக்கும் அதே குணம், தனது மகன் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது அது இயல்பானது. ஆனாலும் கூட சக ஹவுஸ்மேட்ஸை அவர் டார்கெட் செய்யும் விதத்தில் பேசியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சஞ்சீவ் தொடை நடுங்கி என ராஜூவை சொன்னது, பிரியங்கா காபி கப்பை கழுவ சொன்னது என எல்லாவற்றையும் மூஞ்சிக்கு நேராக கேட்டு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தினார். இதை ராஜூவும் விரும்பவில்லை என்பது அவர் கொடுத்த ரியாக்ஷன் மூலம் தெரிந்தது. மேலும் அக்ஷராவிடம் இருவரும் கொஞ்சம் கூட பேசவில்லை.
இந்த வீட்டில் ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் வரும் போது அவர்களை ஓடிச் சென்று முதலில் வரவேற்பது பிரியங்கா தான். ஆனால் அக்ஷராவின் அண்ணாவும் சரி, ராஜூவின் அம்மாவும் சரி முகத்தில் அடிப்பது போல் அவரை பேசியது பிரியங்காவின் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.