அப்படி என்ன இருக்கு புதுக்கோட்டையில்? இங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றி பார்ப்போம்.
புதுக்கோட்டை
தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது.
ஜனவரி 14, 1974 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டமானது உருவாக்கப்பட்டது.
தமிழக வேந்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனைகள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. ஆவுடையார்கோவில் கோயில், குடுமியான்மலை, பிரகதாம்பாள் ஆகிய கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய 7 இடங்களை பற்றி பார்ப்போம்
குன்றாண்டார் கோயில்
சுற்றுலா இது புதுக்கோட்டையிலிருந்து 36 கிலோ மீட்டர் தொலவில் உள்ளது. இது பல்லவ மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். இது எட்டாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் காண முடியும். இங்கு உள்ள தூண்கள் முழுவதும் சுவாமிகளின் குறுஞ்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு அழகிய மண்டபமாகக் காட்சியளிக்கும் நூற்றுக்கால் மண்டபம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. குகைக்கோயில், அழகிய மண்டபங்கள், எங்குப் பார்த்தாலும் கல்வெட்டுகள் என அற்புதங்கள் பல கொட்டிக்கிடக்கும் குன்றாண்டார் கோயிலுக்குச் சுற்றுலாப் பயணிகளும், ஆன்மிக அன்பர்களும் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய மிக முக்கியமான இடமாகும்.
காட்டுபாவா பள்ளிவாசல்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் திருமயம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காட்டுபாவா பள்ளிவாசல். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான இசுலாமிய பள்ளிவாசல் ஆகும். இதனை காட்டுபாவா தர்கா எனவும் அழைக்கின்றனர்.
காட்டுபாவா பள்ளிவாசல் 17-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப்பால் கட்டப்பட்டது என்கின்றனர். இங்கு நடத்தப்படும் கந்தூரி விழா மிகவும் புகழ்பெற்றதாகும். பக்ரூதீன் அவுலியா என்றழைக்கப்படும் காட்டுபாவாவின் சமாதி இங்கு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் கந்தூரி விழா சிறப்பான விழாவாகும். முஸ்லீம்கள் மட்டும் இன்றி பல்வேறு தரப்பட்ட மக்களும் அந்நாளில் கூடுவார்கள்.
அருங்காட்சியகம்
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ தொலைவில் திருக்கோகரணம் என்ற இடத்தில் இருக்கிறது பழமையான புதுக்கோட்டை அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகம் இருக்கும் பொருட்களை கண்களுக்கு விருந்து படைப்போதுமட்டும் அல்லாமல், வியக்கவைக்கும் பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் வேலை நேரம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை. இது சுற்றுலா பயணிகளும், புதுக்கோட்டை மக்களும் தவறாமல் பார்க்க வேண்டி இடமாகும்.
விராலிமலை
புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் விராலிமலை அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலின் மூலக் கோயிலை அழகிய மணவாளன் என்ற மன்னா் அமைத்தார் என இங்கு உள்ள திருப்பணிக் கல்வெட்டு பாடல் ஒன்று தெரிவிக்கிறது. சோலைகளும், மயில்களும், சுனைகளையும் கொண்ட இந்த மலைத்தலத்தில்
முனிவா்கள் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், இத்தலம் விராலிமலை என்றழைக்கப்படுகிறது. சித்திரா பெளா்ணமி, வைகாசி விசாகம் மற்றும் தெப்பத்திருவிழா, ஐப்பசி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. முத்துபழனி கவிராயா் எழுதிய விராலிமலை குறவஞ்சி இங்கு விழா நாட்களில் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.
ஆவூா் தேவாலயம்
இந்தக் கோயிலானது புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் ஆவூா் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த ஆலயமானது திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
1747-ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிருத்துவ தேவாலயம் இவ்வூரில் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை ஜான் வெனஷியஸ் பாசெட் என்பவர் கட்டினார். இது தரையில் இருந்து 56 அடிக்கு உயர்த்தப்பட்டு, 28 அடி உயரம், 38 அடி அகலம் மற்றும் 240 அடி நீளம் கொண்ட சிலுவை வடிவில் உள்ளது. பார்ப்பதற்கு பழங்கால கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.
நார்த்தாமலை
புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது நார்த்தாமலை. இங்கே, மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை மற்றும் பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் உள்ளன. முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது.
அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நடைபெறும் முளைபாரி ஊா்வலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சுற்றுலாப் பயணிகளால் கண்டு களிக்கப்படுகிறது. இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடவரை, பழியிலி ஈசுவரம் குடவரைக் கோயில் ஆகியவற்றையும் நாம் கண்டு தரிசிக்கலாம்
குடுமியான்மலை
புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ, தூரத்தில் அமைந்துள்ளது. பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின் மீது சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவபெருமான் கோவில் ஒன்று அமைந்துள்ளது.
அதனை சுற்றி நான்கு சிறு கோவில்களும் அவற்றில் சிற்பங்களும் காண்பவா் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இவ்வூரில் தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் விவசாய கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது.