சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை..போலிசார் தீவிர விசாரணை
வங்காளத்தின் 45 வயதான பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு 1998-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரைமா பின்னர் சீரியல்களில் கவனத்தை திருப்பினார். சீரியல், விளம்பரங்கள், தயாரிப்பு என திரையுலகில் பரபரப்பாக இருந்த ரைமா திடீரென காணாமல் போனார்.
தன்னுடைய மனைவியை காணவில்லை என ரைமாவின் கணவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை நடிகையை தீவிரமாக தேடி வந்தனர்.
கடைசியாக ரைமா யார் யாரிடம் பேசினார்? எங்கே சென்றார் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
யாரேனும் நடிகையை கடத்தினார்களா அல்லது நடிகை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
இதற்கிடையே ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அது காணாமல் போன நடிகை ரைமாதான் என போலீசார் உறுதி செய்தனர். ரைமாவின் உடலில் தாக்குதலுக்கு உள்ளான காயங்கள் இருந்ததால் இது கொலை என உறுதிசெய்து அது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக ரைமாவின் கார் ஓட்டுநர் மற்றும் கணவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக நடிகை ரைமா காணாமல் போன விவகாரத்தில் திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நடிகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது கடத்தலாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது ரைமா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகை கொலை தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.