இந்திய அணியில் எடுக்காததால் ஆத்திரம்... ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் செய்த தரமான சம்பவம்
குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ஏன் அதிரடி காட்டினார் என்ற காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
இதனிடையே முதல் பிளே ஆஃப் போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களம் கண்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜோஸ் பட்லர் 89, கேப்டன் சஞ்சு சாம்சன் 47, படிக்கல் 28 ரன்கள் எடுத்தனர்.
இதில் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்கள் அதிரடியாக குவித்தார். அவர் ஏன் அதிரடி காட்டினார் என்ற காரணம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரர்களான இஷான் கிஷான், ருத்துராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் உள்ள சஞ்சு சாம்சன் மட்டும் மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் முதல்முறையாக டி20 போட்டிக்காக அறிமுகமானார். இதுவரை 12 போட்டியில் மட்டும் தான் அவர் ஆடியுள்ளார். இந்த 12 போட்டிகளும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொடுக்கப்பட்டவை. இந்த கோபமே அவர் அதிரடி ஆட்டம் ஆட காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.