சூதாட்ட சர்ச்சையில் பஞ்சாப் அணி வீரர் - கடுப்பில் பிசிசிஐ

IPL2021 PBKSvRR deepakhooda matchfixing
By Petchi Avudaiappan Sep 22, 2021 03:40 PM GMT
Report

ஐபிஎல் 2021 தொடரில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா செய்த சம்பவத்தால் பிசிசிஐ கோபமடைந்துள்ளது.

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடரின் 2 ஆம் பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதின.

இதில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனிடையே பஞ்சாப் அணி வீரர் தீபக் ஹூடா நேற்றைய ஆட்டத்திற்கு முன்பாக தான் ஹெல்மெட் அணியும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

பிசிசிஐ விதியின்படி எந்த போட்டிக்கும் முன்பாகவும் ஆட்டம் தொடர்பாக ஐபிஎல் வீரரோ அல்லது வேறு இந்திய அணி வீரரோ போஸ்ட் செய்ய கூடாது. முக்கியமாக பிளேயிங் லெவன் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ போஸ்ட் செய்ய கூடாது. அது விதிகளுக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. தீபக் ஹூடாவின் பதிவு பிளேயிங் 11-ல் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரிவிப்பது சூதாட்டகாரர்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் சிக்னல் என்பதால் இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தான் தான் பிளேயிங் 11ல் ஆட போவதை அவர் ஹெல்மெட் அணிந்து வெளிக்காட்டினார். அதோடு ஹியர் வீ கோ என்று போஸ்ட் செய்து தனக்கும் அணியில் இடம் உண்டு என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இதனால் அவர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது.

மேலும் சூதாட்டத்திற்கு எதிரான ஏசியூ விதிகளை தீபக் ஹூடா மீறியுள்ளதால் அவருக்கு எதிராக விசாரணை நடக்க உள்ளது. தீபக் ஹூடாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் குறித்தும் தவறுதலாக பதிவிடப்பட்டது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.