சீனியர் வீரர்களை காப்பாற்ற கூறப்படும் பொய்கள் - பிசிசிஐ மீது கடுப்பாகும் ரசிகர்கள்
இந்திய அணி வீரர்கள் தேர்வு விவகாரத்தில் பிசிசிஐ நாடகமாடி வருவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ப்ளேயிங் 11 வீரர்கள் தேர்வு தான் பெரும் சர்ச்சையை தற்போது கிளம்பியுள்ளது.
திடீரென இந்த போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டார். எனினும் வாய்ப்புகாக காத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. புஜாராவுக்கு பதிலாக ஸ்ரேயாஸை ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி சமூக வலைதளம் முழுக்க எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்திருந்த பிசிசிஐ, ஸ்ரேயாஸுக்கு வயிற்று பிரச்சினை எனவும், இதனால் 2வது டெஸ்டில் விளையாட முடியவில்லை என்றும் தெரிவித்தது. இதில் தான் பிசிசிஐ நாடகமாடுகிறதா என பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். நேற்று இரவு வரை ஸ்ரேயாஸ் ஐயர் பயிற்சி மேற்கொண்டு முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட சக வீரர்களுடன் சேர்ந்து நடனமாடிவிட்டு, உற்சாகத்துடன் இருந்து வந்துள்ளார். ஆனால் திடீரென இன்று காலை போட்டி தொடங்குவதற்கு வயிற்று பிரச்சினை என காரணம் கூறப்படுகிறது.
இதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் திடீரென ரகானே வெளியேற்றப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டதால் வெளியேற்றப்பட்டதாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே வீரர்களை வெளியேற்றுவதற்காக காயம் என்ற சொல்லை பிசிசிஐ கூறி நாடகமாடி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஸ்ரேயாஸுக்கு பதிலாக இந்த முறையும் வாய்ப்பு பெற்ற சட்டீஸ்வர் புஜாரா 3 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவரின் டெஸ்ட் பயணத்தில் இது வாழ்வா? சாவா? போட்டி என தெரிந்தும் அவர் மீண்டும் சொதப்பி வெளியேறியுள்ளதால் பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.