திடீரென மாற்றப்பட்ட ஐபிஎல் ஆட்டங்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ள நிலையில், 3 மற்றும் 4வது இடத்திற்கு பெங்களூரு, மும்பை, கொல்கத்தா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே லீக் போட்டிகளின் கடைசி போட்டிகள் அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கும், இரவு 7 மணிக்கு பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்திலும் நடக்கவிருந்தது.
ஆனால் இந்த இரண்டு போட்டிகளும் தற்போது ஒரே நேரத்தில், அதாவது இரவு 7 மணிக்கு நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு புள்ளிப்பட்டியல் கணக்குகள் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
ஏனெனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு வெற்றி தோல்விகளை தாண்டி, நெட் ரன் ரேட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கடைசி போட்டியில் விளையாடும் அணி முந்தைய போட்டியின் முடிவை அறிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டுவிடும்.
எனவே அப்படிபட்ட கூடுதல் பலனை அடையாமல் இருப்பதற்காகவே இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.