இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான தொடர் நடக்காது- பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில் தற்போது 2வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 7 ஆம் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிவடைகிறது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டது.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பிசிசிஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்பட அதன் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடர், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்பட தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்றும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இரு அணிகள் பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 26ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.