உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை! வியக்க வைத்த பிசிசிஐ
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிசிசிஐ
2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனெனில், இந்த தொகையானது ஐசிசி அறிவித்த பரிசுத்தொகையை விட பன்மடங்கு அதிகமாகும். கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடியை அறிவித்தது.
அதேபோல் இந்திய ஆடவர் அணிக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத்தொகையாகும்.
இதற்கு முன் இந்திய அணி பெற்ற ரூ.125 கோடியே அதிகபட்ச பரிசுத்தொகையாக இருந்தது.
சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோது ரூ.58 கோடியும், உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
மதிப்புமிக்க கோப்பை
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹைதராபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணியை தோற்கடித்து மதிப்புமிக்க கோப்பையை மூன்றாவது முறையாக இந்திய அணி வென்றுள்ளது.
மேலும், டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து இருமுறை பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக அணியின் வீரர்கள், ஊழியர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
எதிர்காலத்தில் நமது அணி இதேபோன்று மேலும் பல வெற்றிகளைப் பெறவேண்டும். இந்த மாபெரும் வெற்றிக்காக ரூ.131 கோடியை பரிசுத்தொகையாக இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
