பிரதமர் மோடி குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் - பிபிசியின் கேள்விக்கு பதிலளிக்காத மத்திய அரசு
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது அம்மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் தற்போது பிரதமராக பதவி வகித்து வரும் நிலையில் பிரதமரை துரத்தி வருகிறது.
சர்ச்சையை ஏற்படுத்திய ஆவணப்படம்
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் எம்பியான எஸ்ஸான் ஜாஃப்ரி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் ஒன்று ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர் இந்தியா தி மோடி கொஸ்டின்.
ஜனவரி 17 ஆம் தேதி இதன் முதல் பகுதியை பிபிசி நிறுவனம் ஒளிப்பரப்பியது. குஜராத் கலவத்திற்கு மோடி தான் பொறுப்பு என கூறப்பட்டுள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.
இந்த ஆவணப்படத்திற்கு இந்திய தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
விளக்கம் அளித்த பிபிசி
அதில் இது பிரச்சார நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதென்றும், பாரபட்சமும் காலணி ஆதிக்க மனப்பான்மையும் வெளியப்படையாகத் தெரிவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனம், ஆவணப்படத்துக்கு தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், பாஜக உள்பட அனைத்து தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆவணப்பட தொடரில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரிமையையும் இந்திய அரசுக்கு வழங்கினோம். ஆனால் பதிலளிக்க மறுத்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.
குஜராத் கலவரத்தின் போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததால் அன்றைய டோனி பிளேர் அரசு குஜராத் கலவரம் குறித்து விசாரணை ஒன்றை நடத்தியது.
அந்த விசாரணை அமைப்பு அளித்த தகவல்கள் மூலமே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தின் முன்னாள் உயர்மட்டத் தூதரக அதிகாரி, ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை ராணுவ அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் இந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரா, குஜராத்தின் தலைமை பீடத்திலிருந்தவர்கள் கலவரத்தின்போது செயல்படவிடாமல் போலீஸை பின்னிருந்து கட்டுப்படுத்தியதையும், இந்துத்வவாதிகளை ஊக்குவித்ததையும் பற்றி இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் பரந்தளவில் முஸ்லிம் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் ஆவணப்படம் தெரிவிக்கிறது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை.
இங்கிலாந்தில் செயல்படும் பிபிசி ஐபிளேயரில் மட்டுமே வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் அதனைப் பார்த்தவர்கள் மூலம் இந்தியாவிலும் யூடியுப்பில் சில பகுதிகள் பரவ, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவில் இந்த ஆவணப் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்தின் அதிபர் ரிஷி சுனக், "உலகின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.
பி.பி.சி.யின் ஆவணப்படம் இந்துத்துவர்களையும், பா.ஜ.க.வினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.