கேரளாவை உலுக்கிய பிரபல நடிகை கடத்தல் வழக்கு - நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை

By Nandhini Apr 24, 2022 05:52 AM GMT
Report

 பிரபல நடிகை கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் நள்ளிரவில் கடத்தப்பட்டார். இவ்வழக்கின் பின்னணியில் இருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து எடுத்த வீடியோ காட்சிகள் நடிகர் திலீப் வசம் இருந்ததாக இயக்குனர் பாலச்சந்திர குமார் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கேரள குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளது. இதனால், இவ்வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

திலீப் மற்றும் அவரது மைத்துனர் சூரஜ் ஆகியோர் பயன்படுத்திய போன்களிலிருந்து வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. நடிகை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி, திலீப் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றதையும் ஊர்ஜிதம் செய்வதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

அதில் ஒரு ஆடியோவில், திலீப் மனைவியான நடிகை காவ்யாவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவிக்காக அந்தப் பழியை திலீப் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில், திலீப்பின் முதல் மனைவியான நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், கடத்தல் சம்பவம் தொடர்பாக சில கருத்துகளை மஞ்சுவாரியர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சுவாரியர் அளித்த வாக்குமூலத்தினை குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். இத்தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கேரளாவை உலுக்கிய பிரபல நடிகை கடத்தல் வழக்கு - நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை | Bavana Abduction Case Manju Warrier