கடும் நிதி நெருக்கடியில் இலங்கை; இந்தியா வரும் பசில் ராஜபக்சே - பிரதமர் மோடியுடன் பேசப்போவது என்ன?
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரும் இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பசில் ராஜபக்சே ஏற்கனவே கடந்த மாதம் 30-ந் தேதி டெல்லி வந்திருந்தார். 2-ந்தேதி வரை தங்கியிருந்த அவர் அப்போது பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.
குஜராத்தில் ஜனவரி 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே தலைமையிலான குழுவினர் இந்தியா வருகிறார்கள்.
இந்த மாநாட்டின்போது பசில் ராஜபக்சே, பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியா உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம், பசில் ராஜபக்சே வலியுறுத்துவார்.
மேலும் இருநாட்டு நல்லுறவு குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அவர்கள் சந்திக்கும் தேதி மற்றும் இடம் இன்னும் முடிவாகவில்லை.
பசில் ராஜபக்சே ஏற்கனவே கடந்த மாதம் 30-ந் தேதி டெல்லி வந்திருந்தார். 2-ந்தேதி வரை தங்கியிருந்த அவர் அப்போது பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.
டெல்லி சுற்றுப்பயணத்தின் போது வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் மீண்டும் அவர் 2-வது முறையாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.